பக்கம் எண் :

154சித்தர் பாடல்கள்

106.சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டிஎனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி!
  
107.தான் என்னைப் பார்த்தாண்டி! தன்னைத்தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி! நவில இடம் இல்லையடி!
  
108.இன்றிருந்து நாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி!
  
109.பார்க்கில் எளிது அலவோ? பற்றற்ற பற்று அலவோ?
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி!
  
110.இத்தனை காலமடி இறந்து பிறந்த தெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில்உறை நீரானேன்.
  
111. எக்காலம் பட்டதடி! இறந்து பிறந்ததெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில்.
  
112.காலம் கழிந்ததடி! கர்மம் எல்லாம் போச்சுதடி!
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி!
  
113.முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண்! எனை விழுங்கிக் கொண்டான்காண்.
  
114.பாலின்கண் நெய் இருந்தாற் போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறவிழுங்கிக் கொண்டாண்டி!
  
115.செத்தபடம் ஆனேண்டி! தீ இரும்பில் நீரானேன்;
ஒத்தவிடம் நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன்.
  
116.ஒப்பும் உவமையும் அற்ற ஓத அரிதாய பொருள்
இப்புவி யில்குருவே என்னவந்தோன் தாள் வாழி.
  
117.ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார்.