பக்கம் எண் :

வாதிகேசரி அழகிய மணவாள சீயர்

வாதிகேசரி அழகிய மணவாள சீயர் (13-நூ)

இவர் வைணவ சமயத்தினர். வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை பெற்றவர். வடமொழியிலும் தமிழிலும் பல நூல்களை இயற்றியுள்ளதாகத் தெரிகிறது.

நூல் :பகவத்கீதை வெண்பா.

இந்நூல் பகவத் கீதையைத் தமிழில் வெண்பா அமைப்பில் பாடப் பெற்றது.

வாமதேவ தேசிகர் (19-நூ)

நூல் :சேனை குலத்தார் பட்டயம் (1889).

இந்நூல் உரைநடையில் அமைந்தது. சேனைகுல வேளாளரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவது.

வாமதேவ முருக பட்டாரகர் (19-நூ)

தந்தை:பொன்னு பட்டாரகர்.

இவர் திருக்கயிலாய பரம்பரை சிதம்பரம் வாமதேவ மறைஞான சம்பந்த சைவாசாரிய மரபினர் ஆவர். தமிழ்நாட்டில் உள்ள சிலப்பதிகள் அனைத்திற்கும் சென்று இறைவழிபாடு செய்து, சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தித் தொண்டாற்றினார். முருகப் பெருமானிடம் பேரன்பு கொண்டிருந்த இவர் கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். அவருடைய வரலாற்றைப் புராண முறையில் நூலாகப் பாடியுள்ளார்.

நூல் :கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம், சந்தானா சாரியார் புராணம்.

கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம் நூலாசிரியரின் மகன் முருகபட்டாரகரால் அச்சிட்டு வெளியிடப் பெற்றுள்ளது; 173 பாடல்களை உடையது.