பக்கம் எண் :

1326
 

"உபதேசம் முப்பது" "மந்திரம் முந்நூறு" என்ற இரண்டு நூல்கள் செய்துள்ளார். இதனைத் தமிழ் மூவாயிரத்திலுள்ள,

"மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே."

என்ற பாயிரச் செய்யுளால் அறியலாம்.

இச் செய்யுளில் முப்பது உபதேசமும், முந்நூறு மந்திரமும் மூலன் உரை செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறதே, அந் நூல்களைப் பாடும்போது அவருக்கு மூலன் என்ற பெயர் இல்லையே என்று கேட்கலாம். இச் செய்யுள் மூலன் குரம்பையுள் புகுந்த பின்னர் செய்த தமிழ் மூவாயிரத்துக்குப் பாயிரச் செய்யுளாதலால் உடம்பு வேறுபாடு கருதாது உரைத்ததாகும்.

"மந்திரம் முந்நூறு" என்ற நூலில் சிறப்புப் பாயிரத்தில் திருமூலருடைய இயற்பெயர் சுந்தரநாதன் என்று கூறப்பட்டிருக்கிறது. அச் செய்யுள் வருமாறு:

"மந்திரங் கொண்டு வழிபடு வோர்க்குச்
சுந்தர நாதன் சொல்லிய மந்திரம்
நந்திஎந் நாதன் நாவார ஓதினன்
பைந்தொடி மேனிப் பயனது தானே."

"வந்தமட மேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே."

என்று தமிழ் மூவாயிரத்திலுள்ள சிறப்புப்பாயிரச் செய்யுளாலும் அறியலாம். இச் செய்யுள் சுந்தரநாதருடன் ஒருங்கு கற்ற ஒருவரால் பாடப்பெற்றது.

இவருக்கு நாதன் என்ற பட்டம் நந்தியெம் பெருமானால் கொடுக்கப்பட்டது. இதனை,

"நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றொம்."

என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் விளக்குகிறது.

இவர் நந்தி அருளாலேயே மூலன் குரம்பையுள் புக நேர்ந்தது என்பதனை,