| 1242. | அரும்பத மாக்கு மடியரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய பெரும்பத மெய்தலுற் றீர்!வந் திறைஞ்சுமின், பேரரவம் வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத் தரும்பத ஞானசம் பந்தனென் னானைதன் தாளிணையே. | | 61 | | 1243. | தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் கீளின் மலங்க விலங்கே புகுந்திடும், கெண்டைகளும், வாளுந் தொலைய மதர்த்திரு காதி னளவும்வந்து மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. | | 62 |
1242. குறிப்புரை: அரும் பதம் - அரிய சொல். என்றது துதிமொழியை அவைகளை ஆக்குதல், துதித்தல். எனவே, 'துதி செய்யும் அடியரொடு, அஞ்சலி செய்தார்க்கும் அடைதற் கரிய பெரும்பதம்' - என்றவாறாம். பெரும்பதம் - வீடு பேறு. 'பெரும்பதம் எய்தலுற்றீர்! வந்து என் ஆனைதன் தாளிணையே. இறைஞ்சுமின்' - என இயைத்து முடிக்க. பேர் அரவம் வரும் பதம் - பெரிய ஆரவாரம் எழுகின்ற இடம். 'பதமாகிய காழி' என்க. "பை அரவு அல்குல்"1 என்பதில், 'அரவப் பை' - என்பது 'பை யரவு' எனப் பின் முன்னாகி நின்றது போல, 'கமல மலர்' என்பது பின் முன்னாக மாறி, "மலர்க் கமலம்" என நின்றது; இலக்கணப் போலி மொழி. 'பத சம்பந்தன்' என இயையும். "என் ஆனை" என்பது காதற் சொல். ஏகாரம், பிரிநிலை. 'வேறு முயலல் வேண்டா' என்பதாம். 1243. குறிப்புரை: "கெண்டைகளும்" என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. இப்பாட்டு, 'பாங்கன் நீ இன்னையாதற்குக் காரணம் என்னை' வினாயதற்குத் தலைவன் உற்றது உரைத்தது. சரணம் - அடைக்கலம். தரியலர் - பகைவர். 'தரியலர் போல் மலங்க' என்க. மலங்குதல் - தலங்குதல்; "மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி"2 - என்பது காண்க. கீளுதல் - கிழித்தல்; உள்ளத்தைக் கிழித்தல். 'கீளுதலால் மலங்க' என்பதாம். விலங்கே - குறுக்கே. (யான்) 'கீளின் மலங்க, கருங் கண்ணி வைத்த மென்னகை விலங்கே புகுந்திடும்' என இயைத்துக் கொள்க. தொலைய - தோற்க. மதர்த்தல் - களித்தல். மின் - ஒளி. புரியா - புரிந்து; வெளிப்படுத்தி.
1. திருமுறை - 3.120.5. 2. திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 3.
|