பக்கம் எண் :

திருநகரப் படலம்107

 தண்ட மேந்துகைக் குஞ்சரம் வெளிறபுத் தேகும்
 தண்ட மூற்றெழ வாக்கிய மும்மதத் தாரை
 வண்டு துன்றலிற் புடைநகர் மாதராள் வயிற்றுக்
 கொண்டெ ழுந்துநீண் மணிமயி ரொழுக்கெனக் குலவும்.

(இ - ள்.) தண்டாயுதத்தை ஏந்துகின்ற கரங்களோடு கூடிய யானைகள் கட்டுத் தறியைப் பறித்தெறிந்து தாங்கள் செல்கின்ற வழியானது ஊற்றெழும்படி கொட்டிய மும்மத ஒழுங்கானது வண்டுகள் மொய்த்தலினால் புடை நகராகிய பெண்ணின் உதரத்தைத் தனக்கிடமாகக் கொண்டு எழுந்து நீண்ட கரிய மயிரொழுங்கென்று சொல்லும் படி விளங்கும்.

(வி - ம்.) தண்டம் யானைக் கையில் இருக்கும் தண்டாயுதம். வெளிறு - யானைகட்டுந் தறி. தபுத்தெறிந்து - பறித்தெறிந்து. தண்டம் - யானை செல்லும் நெறி. தாரை குலவும் எனக் கூட்டுக. இனி, வயிற்றுக் கொண்டெழுதல் - வயிற்றில் எழுதல் எனினும் ஒக்கும்.

(26)

 தோய்ந்து நீர்பரி திக்கிறைத் தலதுதூ நீரும்
 வாய்ந்த மாதவ ருண்டிடா வளமைபோன் மணிக்கைப்
 பாய்ந்த நீருடன் முழுவது மெறிந்தும்பர்ப் பனித்துக்
 காய்ந்த வேழங்கள் பின்புவாய் மடுப்பன கமழ்நீர்.

(இ - ள்.) நீரில் மூழ்கி (மூழ்கியபின்) சூரியனுக்கு, நீரை அர்க்கியம் கொடுத்த பின்னரல்லது நன்மை பொருந்திய நீரினையும் பொருந்திய தவத்தை யுடைய பெரியார் உண்ணுதல் செய்யாத தன்மை போல அழகிய துதிக்கையின்கண் பாய்ந்த நீரினைத் தேக முழுவதும் வீசி நிரைத்து மேலிடத்தையும் குளிரச் செய்து பசியாற் காய்ந்த யானைகள் வாசனையை யுடைய நீரைப் பின்னருண்பன.

(வி - ம்.) நீர் தோய்ந்து என மாற்றுக. பரிதிக் கிறைத்தல் -அருக்கியந் தருப்பண முதலியன செய்தல். உம்மை யிழிவு சிறப்பு. பாய்ந்த - பரவிய. உம்பர் பனித்து - மேலே துளித்து. மடுப்பன - உண்பன என்க.

(27)

 தடத்து நீர்த்திரைத் திரளுமத் தடத்துநீர் மடுப்பான்
 இடத்து நீங்கிய வாம்பரித் திரளுநேர்ந் திரும்போர்
 நடத்த மேற்செலு மாறுபோ லெழுந்துதாய் நடந்தங்
 கடுத்த போதவை யடியர்போற் றலைபணிப் பனவால்.

(இ - ள்.) தடாகங்களினுள்ள நீரிலுளவாகிய அலையின் கூட்டங்களும் அத் தடாகங்களில் நீரருந்தும் பொருட்டு (தாங்கள்) நிற்கும் நிலைகளினின்றும் நீங்கிய தாவிச் செல்கின்ற குதிரையின் கூட்டங்களும் (தம்மு) ளெதிர்த்துப் பெரும் போரினைச் செய்யப் (பகை) மேற் செல்லுந் தன்மை போல எழுந்து தாவி நடந்து அவைக ளிரண்டும் கரையை யண்மிய போது (சிவ) னடியார்கள் (தம்முளெதிர்ப்படின்) ஒருவர்க்