பக்கம் எண் :

116தணிகைப் புராணம்

பெருமான் அருள்வகையா னீங்கி முன்னர்ப்போல அவ்வீர மகேந்திர மென்னும் நகரத்தினைச் சுற்றிக் கிடந்தாற் போன்றது.

(வி - ம்.) கடலானது தகுவர் குலத்தை மாத்திரம் அழித்து மீட்டும் அம் மகேந்திரத்தை யுண்டாக்கிச் சூழ்ந்து கிடந்தாற் போன்றதென முடிவு செய்க. வீரமகேந்திரம் - சூரன் பட்டினம். அதனை: அப்பட்டினத்தை. உண்டென்னும் செய்தெ னெச்சம் "தந்தென்" னும் எச்சத்தோடு முடிந்தது. நவை-இறைவனாணை கடத்தலாகிய குற்றம்.

(51)

 சூர்கவர்ந்த வளம்வேண்டிச் சுரரடுத்த
           ஞான்றுதன்பாற் சூழ வைகும்
 ஏர்கனிந்த திசைக்கிறைவ ருடன்மான
           சோத்திரம்வந் திருந்தா லன்ன
 போர்கடந்த மதிற்புறத்துப் பூங்கிடங்கம்
           மலைவதிபுட் கரஞ்சூழ் சுத்த
 நீர்கலந்த கடலுமுடங் கணைந்ததனைச்
           சூழ்கிடந்த நிலையுங் காட்டும்.

(இ - ள்.) சூரன் (தேவர்கள்பால்) வௌவிய செல்வங்களை (மீட்டும் பெற) விரும்பித் தேவர்கள் (தணிகை மலையை வந்து) அண்மிய காலத்து மானசோத்திர மென்னும் மலையானது தன் பக்கத்துச் சூழத் தங்குந் திக்குப் பாலகருடன் வந்திருந்தாலொத்த (பகைவர் மேற்சென்றுவரின்) போரினைச் செய்யும் மதிலின் பக்கத்தே யுள்ள பொலிவு பெற்ற அகழியானது அம்மானசோத்திர மலையின்கட் டங்கிய புட்கர மென்னுந் தீவைச் சூழ்ந்த நல்லநீர் கலக்கப்பெற்ற சுத்தநீர்க் கடலும் ஒரு சேரப் பொருந்தி அம்மானசோத்திர மலையைச் சுற்றிக் கிடக்கும் நிலையையும் காட்டா நிற்கும்.

(வி - ம்.) அடுத்த ஞான்று தானும் வந்திருந்தா லன்னவென முடிக்க. புட்கரத் தீவில் பெரும்புறக் கடல் சூழப் பெற்றிருக்கிற மான சோத்திர மலையின் எண்டிக்கிலும் அட்டபாலக ரிருத்தலால் "திசைக்கிறைவருடன்" என்றார். கிடங்கு காட்டு மென்க. புட்கரஞ் சூழ் - புட்கர மென்னும் தீவைச் சூழ்ந்த. அதனை - மானசோத்திர மலையை.

(52)

 கோடுநெருங் கியதமது குலம்பணித்த
           றனக்கன்றிக் குறிய தொண்டன்
 பாடுமரு ளியவிறைவற் பணிந்துவரம்
           பெறநேமிப் பறம்பு மப்பால்
 பீடுபிறங் கியகடலு மதிலகழிப்
           பெயர்பூண்டு பெயர்ந்த வோவென்
 றாடுகொடி மதிலுகப்பு மகழியகற்
           சியுமெவரு மயிர்ப்ப மல்கும்.