பக்கம் எண் :

132தணிகைப் புராணம்

 ஈங்கிவர்க ளோடுபுண ரின்பநுகர் பாக்குத்
 தாங்குபரு வம்பெரிது சார்பொழுது காறும்
 ஆங்கவர்க ளோடுநல னார்ந்துபயில் கின்றார்
 வீங்குபுகழ் மாயன்முதல் விண்ணவர்க ளெல்லாம்.

(இ - ள்.) மிக்க புகழினை யுடைய விண்டு முதலிய தேவர்கள் யாவரும் இத் தணிகைப் பதியின்கண்ணுள்ள இப் பரத்தையரோடு கூடி இன்பம் நுகரும் பொருட்டு அவர்கள் மேற்கொள்கின்ற புணர்ச்சிக் குரிய மங்கைப் பருவம் வருந்துணையும் அவ் வைகுந்த முதலிய உலகங்களில் தங்கி யிருக்கின்ற அத் திருமகள் முதலிய தெய்வப் பெண்களினோடு இன்ப நுகர்ந்து தங்குகின்றார்கள்.

(வி - ம்.) இம் மாதர் - இத் தணிகையின்கண்ணுள்ள பரத்தையர். பாக்கு - வினையெச்ச விகுதி. பருவம் பெரிதுசார் பொழுதுகாறும் - புணரும் பக்குவம் வருந்துணையும். ஆங்கு - வைகுந்த முதலிய உலகங்களில். அவர்கள் இலக்குமி முதலிய தேவ மாதர்.

(83)

 கங்கையிறை வன்முடிக லப்பவிடம் வெற்பு
 மங்கையுட னானதும லர்ப்பொனரி மார்பம்
 தங்கியதும் வாணிதவி சாக்கியதும் வேதன்
 பொங்குமறை நாவரைவில் பூவையர்பொ ருட்டே.

(இ - ள்.) இறைவன் முடியின் கண்ணே கங்கை கலத்தலைச் செய்ய இடப்பாகத்தின் மலையரையன் புதல்வியுடன் சேர்ந்ததும், தாமரை மலரின்கண் ணெழுந்தருளிய இலக்குமி விண்டுவின் மார்பிற்றங்கியதும் பிரமனது வேதத்தை யோதுகின்ற நாவினைச் சரசுவதி ஆசன மாக்கிக் கொண்டதும் தமக்கென ஒரு நாயகனை வரைந்து கொள்ளாத பரத்தையர் பொருட்டேயாம்.

(வி - ம்.) இவர் நிமித்தமே கங்கை கலப்ப வெற்புமங்கை இடனுடனானதும், வேதன் நா வாணி தவிசாக்கியதும், பொன் தங்கியதுமென வினை முடிவு செய்க. பூவையர் - நாகணவாய்ப் பறவை போன்றவர். (பரத்தையர்)

(84)

 வெள்ளணிய ணிந்துபலர் மெய்முழுத ரத்த
 ஒள்ளணிய ணிந்துபல ருத்தலையி றப்பார்
 வெள்ளமெனு மாக்கமும்வி ளங்குகலை மாண்பும்
 உள்ளிமலர் மாதர்பல ராயுறுவ தொப்ப.

(இ - ள்.) வெள்ள மென்னு மெண்ணையுடைய செல்வத்தினையும், விளங்குகின்ற அறுபத்து நான்கு கலைகளின் மாட்சியையும் (தாங்கள் அப் பரத்தையர் மாட்டுப் பெற) நினைந்து செந்தாமரையினும் வெண்டாமரையினும் வீற்றிருக்கின்ற இரு மாதர்களும் பல மாதரா யுருவம் கொண்டு பொருந்தலை யொப்ப (தலைவி புதல்வர்ப் பயந்தமையைப் பரத்தையர் சேரியின் கண்ணுள்ள தலைவர்களுக் கறிவிக்க) பல சேடியர்கள் வெள்ளணியை யணிந்தும், தலைவி பூப்படைந்தமையை அச்சேரியின்கண்ணுள்ள தலைவர்களுக்கு அறிவிக்கப் பல சேடியர்கள் உடன் முழுவதும்