பக்கம் எண் :

164சித்தர் பாடல்கள்

37.அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே!
  
38.சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே!
  
39.ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே!
  
40.என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்,
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே!
  
41.நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே!
  
42.சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த
நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே!
  
43.குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய்,
அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே!
  
44.ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!
  
45.இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே!
  
46.மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே!
  
47.உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே!
  
48.தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!
  
49.விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே!
  
50.ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய்,
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே!