பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்165


51.வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி,
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே!
  
52.பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே!
  
53.பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி,
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே!
  
54.முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய்,
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே!
  
55.ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!
  
56.வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே!
  
57.ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே!
  
58.மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே!
  
59.சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே!
  
60.பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய்,
அறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே!
  
61.வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல்,
ஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே!
  
62.பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே!
  
63.நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே!
  
64.கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்;
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே!