பக்கம் எண் :

316சித்தர் பாடல்கள்

              மெய்ஞ்ஞானம்

ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று
தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே
     தற்சொரூபங் கொண்டாண்டி.
123
  
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தாண்டி.
124
  
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும்
சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே
     சுட்டான் துருசாலே.
125
  
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே
     தானிருக்க மாட்டேண்டி.
126
  
கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச்
சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே
     துயரம் எனக்கு ஆறாதே.
127
  
மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி
விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே
     வெந்துவிடக் கண்டேன்டி.
128
  
ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே
     நீறாக வெந்துதடி.
129
  
போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே
     அடுக்கழிய வெந்ததடி.
130
  
வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே
     சுட்டான் துருசறவே.
131