“ஆடுகின்ற சூத்திரம்தான் அறுமளவு மேதிரிந்து போடுகின்ற நாள்வருமுன் போற்றுவது எக்காலம்?” (38) நான் இறந்துபோக இனி நாள்வருவது எக்காலம்? (88) என்ற பாடல்கள் அவரது நிலையாமைக் கருத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் தெரிகின்றன. எல்லாச் சித்தரையும் போலவே பத்திரகிரியார் பெண்மையைப் பழிக்கின்றார். “வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே தட்டுண்டு நிற்கை தவிர்வதுவம் எக்காலம் (11) ஆறாத புண்ணிலே அருந்திக் கிடவாமல் தேறாத சிந்தைதனைத் தேற்றுவது எக்காலம்? (12) இப்படிக் கேட்பதால் இவர் பெண் எதிரியல்ல. பெண்ணைத் தாய்மையாக இவர் பாவிப்பது ‘பெண்ணைத் தாய் போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம்?’ (8) என்று கேள்வி கேட்பதிலிருந்து பெண்ணைத் தாய்மையால் வெகு உயர்வாக நினைப்பது புலனாகிறது. இறைவனிடம் இவர் பின்வருமாறு வேண்டிப் புலம்புகின்றார். “ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைக் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டும் நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்க வேண்டும் அருவாய் உருவாகி, ஆதி அந்தம் ஆகின்ற குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று புலம்புகின்றார் பத்திரகிரியார். அறிமுகப் புலம்பலைத் தொடர்ந்து ஞானப் புலம்பலைத் தொடருவோமாக. |