பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்303


என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
     இன்னவிதம் என்று                  என் கண்ணம்மா
     எடுத்து உரைக்க லாகாதோ?
33
  
எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
     எல்லாரும் வந்து                    என் கண்ணம்மா
     எனக்குஏவல் செய்யாரோ.
34
  
என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
     என்னை அறியாமல்                 என் கண்ணம்மா
     இருந்தேன் ஒருவழியாய்.
35
  
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
     பாதாள வத்துவெல்லாம்              என் கண்ணம்மா
     பக்கத்து இருக்காதோ.
36
  
கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
     திடமா மயக்கம்வந்து                என் கண்ணம்மா
     சேர்ந்தது என் சொல்லாயோ?
37
  
கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
     வல்லபங்கள் தோணாமல்            என் கண்ணம்மா
     மயங்கித் தவிக்குறண்டி.
38