பக்கம் எண் :

கோசர் யார்?109

 

"அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்"

(குறள். 501)

என்னும் முறைபற்றியோ, வேறுவகையிலோ, மறம் உண்மை பணிவு நன்றியறிவு, அன்பு, கடைப்பிடி, வலிமை முதலிய பண்பிற் சிறந்தவராக வேந்தரால் தெரிந்தெடுக்கப்பெற்ற கைக்கோளர், தெரிந்த கைக்கோளர் என்னப்பட்டனர். "பராந்தகன் தெரிந்த கைக்கோளர்," "சுந்தரசோழர் தெரிஞ்ச கைக்கோளர்", "பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக்கோளர்" எனக் கல்வெட்டில் வருதல் காண்க.
     அரசரின் முழு நம்பிக்கைக்குரியவராயிருந்த கைக்கோளர் அரண்மனையிலும் உவளகத்திலும் அகப் பரிவாரமாகவும் அமர்த்தப் பெற்றனர் என்பது,

 

"நம்பிராட்டியார் நேரியன் மாதேவி
யகப்பரிவாரத்துக் கைக்கோளன் சோறுடையா
னருக்கனான அன்பார பாணதி ராயன்"

 
(S. I. I. Vol. No, 700) எனவரும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம்.
     கோளர் குடியிருந்த பல வூர்கள் அவர் குடியாற் பெயர் பெற்றிருந்தன. கொடுங்குன்றத்திற்கு அருகில் திருக்கோளக்குடி என்றொரு மலையடியூர் உளதென்றும் "கோளர் இருக்குமூர் கோள்களவு கற்றவூர்" என்றும் காளமேகப்புலவர் தனிப்பாட்டில் 'கோளர்' என்பது குடிப்பெயர் என்றும், பெரும்புலவர் ரா. இராகவையங்கார் கூறுவர்.
     பாணன் என்னும் குடிப்பெயர் பாண் என்று குறுகுவதுபோல், கோளன் என்னும் குடிப்பெயரும் கோள் என்று குறுகும். இக் குறுக்கம் பெரும்பாலும் பாண்சேரி, கைக்கோட் படை எனப் புணர்மொழிப் பெயர் களிலேயே நிகழும். "இப்படிச் சம்மதித்து விலைப்பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம் ஆதிசண்டேச்சுர தேவர்க்கு, திருநெல்வேலிக் கைக்கோட் சேனாபதிகளோம்." (S.I.I. Vol.V No, 118) எனவரும் கல்வெட்டுப் பகுதியைக் காண்க.
     சில சொற்களில் ளகரம் சகரமாகத் திரிகின்றது. இதற்கு உளி-உசி, தூளி-தூசி என்பன எடுத்துக்காட்டு. இம்முறையில் கோளன் என்பதும் கோசன் எனத் திரிந்ததாகத் தெரிகின்றது. பின்பு, தேசம்-தேயம் என்பதுபோல் கோசன்-கோயன் என்றாயிருத்தல் வேண்டும். பாண், கோள் என்னுங் குறுக்கங்கட்கேற்ப, கோயன் என்பது கோய் என்று குறுகுதலும் இயல்பே.
     "கோயன் பள்ளி என்பது கருவூரையடுத்துள்ளது. இதனாற் கோசன் என்னும் பெயர் கோயம் என வழங்கப்பட்டதென்று உணரலாம். கோயன் புத்தூர் என்பதும் இப்படிப்பட்டதேயாம், இக் கோயர்குடி கோய் எனவும் வழங்கப்பட்டதென்பது இளங்கோய்க்குடி என்ற பெயரான் அறியலாம்.