முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012-1044) பரகேசரிவர்மன் முதலாம் இராசேந்திரன் சோழராட்சிக்குப் புதியவனல்லன். பல ஆண்டுகள் அவன் தன் தந்தையுடன் இணைந்திருந்து போர்க் கலைகளிலும், ஆட்சிக் கலையிலும் சீரிய பயிற்சியும், தெளிவும், ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருந்தான். நிலவு திருவாதிரையுடன் கூடியிருந்த நாளன்று இவன் பிறந்தான். இராசேந்திரன் சோழரின் அரியாசனத்தை முப்பத்திரண்டாண்டுகள் அணிசெய்து வந்தான். தன் ஆறாம் ஆட்சியாண்டிலேயே அவன் மகன் இராசாதிராசனுக்கு இளவரசு பட்டங் கட்டிவிட்டான். இராசேந்திரன் நடத்திய போர்களைப் பற்றியும் அவன் கொண்ட வெற்றிகளைப் பற்றியும் பல கல்வெட்டுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் விரிவான செய்திகளைத் தெரிவிக்கின்றன. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டவை (கி.பி. 1017). இச் செப்பேட்டுக் கொத்தில் முப்பத்தோர் ஏடுகள் கோக்கப் பெற்றுள்ளன. இராசேந்திரன் இருபத்து நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1035-36) ஒன்று அவன் பெற்ற வெற்றிகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது : திருமன்னி வளர, இருநில மடந்தையும், போர்ச்சயப் பாவையும், சீர்த்தனிச் செல்வியும் தன்பெருந் தேவிய ராகி இன்புற நெடிதியல் ஊழியுள் இடைதுறை நாடும் தொடர்வன வேலிப் படர்வனவாசியும், கள்ளி சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும், பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும், ஆங்குஅவர் தேவியர் ஓங்கெழில் முடியும், முன்அவன் பக்கல் தென்னவன் வைத்த சுந்தர முடியும், இந்திரன் ஆரமும், தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும், எறிபடைக் கேரளன் முறைமையின் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும், செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவல் பல்பழந் தீவும், செருவிற் சினவி இருபத் தொருகால் |