பக்கம் எண் :

276தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

    ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்,
    கலங்கா வல்வினை இலங்கா சோகமும்,
    காவலம் புரிசை மேவிலிம் பங்கமும்
    விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
    கலைதக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
    தீதமர் வல்வினை மதமா லிங்கமும்,
    கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
    தேன்நக்கு வார்பொழில் மானக்க வாரமும்
    தொடுகடல் காவல் கடுமுரண் கிடாரமும்
    மாப்பொரு தண்டால் கொண்ட...

    இக் கல்வெட்டில் காணப்பெறும் ஊர்களில் பலவற்றைக் கண்டுபிடிப்பதில்
ஆராய்ச்சியாளரிடையே ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் எழுந்துள்ளன.
இடைதுறை நாடு என்பது இராய்ச்சூர் ஆற்று இடைவெளியாகும்; வனவாசி
என்பது பாணவாசி; கொள்ளிப்பாக்கை என்பது ஐதராபாத்தின்
அண்மையிலுள்ள குல்பர்கா என்னும் இடம்; மண்ணைக் கடக்கம் என்பது
மானியகேதம்; ஈழம் என்பது இலங்கை ; பழந்தீவுகள் என்பன மாலத் தீவுகள்;
சாந்திமத் தீவு என்பது அரபிக் கடலிலுள்ளதொரு தீவாகும்; இரட்டபாடி
ஏழரை இலக்கம் மேலைச் சளுக்க நாட்டின் ஒரு பகுதி; சயசிங்கன் என்பான்
மேலைச் சளுக்க மன்னன் இரண்டாம் சயசிம்மன் (கி.பி. 1015-1043) ; முயங்கி
அல்லது முசங்கி என்னும் ஊர் பழம் ஐதராபாத்து இராச்சியத்திலுள்ள மஸ்கி
என்பதாகும் ; சக்கரக்கோட்டம் பஸ்தாரில் உள்ளது. மதுரை மண்டலம்,
நாமனைக்கோட்டம், பஞ்சப்பள்ளி என்பன பஸ்தாரின் பிரிவுகளாம்.
பஸ்தாருக்கு மாசுணி தேசம் என்று ஒரு பெயர் உண்டு. மாசுணி தேசம்
என்பது இப்போது பாகிஸ்தானத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ளதோர்
ஊர் என்றும் கூறுவர். இவை யாவும் நாகவமிச மன்னரின் ஆட்சிக்குட்
பட்டிருந்தவை. ஆதிநகர் என்பது ஒரிஸ்ஸா இராச்சியத்திலுள்ள ஜார்ஜ் நகர்
என்பதுதான். இந்திரரதன் சோமவமிச மன்னரில் ஒருவன்போலும் ;
ஒட்டவிஷயம் என்பது இக் காலத்தில் உள்ள ஒரிஸ்ஸா இராச்சியமாகும்.
கோசலை நாடு என்பது மகாநதியின் கரையோரம் அமைந்திருந்தது.
தண்டபுத்தி என்பது மிதுனபுரி மாவட்டத்தில் உள்ளது. இரணசூரனும்,
கோவிந்தசந்த(சந்திர)னும் வங்க நாட்டுக் குறுநில மன்னராவர். மகிபாலன்
என்பவன் வங்கம், பீகார்ப் பகுதியில் அரசாண்டு வந்த பாலர் வமிசத்து
முதலாம் மகிபாலன் ஆவான். சங்கு என்பவன் அவனுடைய படைத்
தலைவனாகப் பணிபுரிந்தவன் போலும். தக்கண லாடம், உத்தர லாடம்
என்பன தெற்குராதாவும்