இந்தச் செய்திகளைக் கஜினி முகமது கேள்வியுற்று வெகுண்டான். அம் மன்னர்களின்மேல் பழிவாங்கும் எண்ணத்துடன் அவன் மீண்டும் 1019-ல் கன்னோசியின்மேல் படையெடுத்தான். திரிலோசன பாலன் அவனை எதிர்த்து நின்று போராடியும் வெற்றி காணவியலாதவனாய் நகரைத் துறந்து ஓடிவிட்டான். இரண்டாண்டுகளுக்குப் பின்பு முகமது வித்தியாதரன்மேல் படையெடுத்து வந்தான் (கி.பி. 1021-22); தனக்கு எதிராகக் கூட்டணி ஒன்று நிறுவியதற்காக வித்தியாதரனை ஒறுக்க எண்ணினான். இதே ஆண்டுகளில்தாம் முதலாம் இராசேந்திரன் கங்கை கொள்ளுவதற்காக வடநாட்டு விசயம் செய்தான். அவனுக்குப் போசராசன் நட்பும், சேதி நாட்டுக் காளச்சூரி மன்னன் காங்கேய விக்கிரமாதித்தன் நட்பும் கிடைத்தன. அவர்களுடன் கூட்டுறவு பூண்டு இராசேந்திர சோழனும் வித்தியாதரனுக்கு உதவ விரைந்தான். சக்கரக் கோட்டத்தைக் கைப்பற்றிய பிறகு இராசேந்திரன் மதுரை மண்டலம், நாமனைக் கோட்டம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் ஆகியவற்றைக் கைப்பற்றினான் என்று அவனுடைய மெய்க்கீர்த்தி களினின்றும் அறிகின்றோம். மாசுணி தேசம் என்றால், பாம்பு நாடு என்று பொருள் கொள்ளுவதைவிட அப்படி ஒரு தேசம் வட இந்தியாவில் இருந்ததா என்று தேடிப் பார்த்தல் நலம். அலெக்சாந்தர் இந்தியாவின்மேல் படையெடுத்து வந்தபோது, சிந்து நதியின் முகத்துவாரத்தில் புகுந்து நதி வழியே கப்பலில் சென்றுகொண்டிருந்தான் என்றும், அவ் வமயம் ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்திருந்த சோத்ரி, மாசுணி ஆகிய இரு வகுப்பாரின் அடைக்கலத்தையும் ஏற்றுக்கொண்டான் என்றும் கிரேக்க வரலாற்று ஆசிரியரான டயடோரஸ் எழுதுகின்றார். மாசுணி என்ற இடம் சிந்து நதிக்கரை ஓரிடத்தைத் தவிர இந்தியாவில் வேறெங்கும் இல்லை. எனவே, இந்த மாசுணி தேசமே மெய்க்கீர்த்தியில் குறிக்கப்பட்டுள்ள மாசுணி நாடு எனக் கொள்ளலாம். இராசேந்திரனின் நண்பனான போசராசனும் சிந்து நாட்டில் முஸ்லிம் மன்னனைப் பொருது வெற்றி கண்டான் என்று வரலாறு கூறுகின்றது. மதுரை மண்டலம் என்பது யமுனைக் கரையில் உள்ள மதுரையே என்பதில் ஐயமில்லை. இந்தியாவிலேயே புகழ்பெற்ற மதுரைகள் இரண்டே உண்டு. இராசேந்திரன் வெற்றி கண்டது வடமதுரைதான். அந் நகர் அக் காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந் நகரின்மேல் கஜினி முகமது பன்முறை தாக்குதல் தொடுத்தான்; பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ் வடமதுரையை இராசேந்திரனும் |