இராசாதிராசன் போரில் முறியடித்தான். கம்பிலியில் இருந்த சளுக்க மன்னரின் அரண்மனை யொன்றை அவன் இடித்துத் தரைமட்டமாக்கினான். கலியாணபுரமும் மண்ணோடு மண்ணாக மறைந்தது. அங்கிருந்த மாளிகைகளும், அரண்மனைகளும் தவிடு பொடியாயின. இராசாதிராசன் கலியாணபுரத்தில் அமர்ந்து ‘விசயராசேந்திரன்’ என்ற விருது ஒன்றை ஏற்று வீராபிடேகம் செய்துகொண்டான். அவன் கவர்ந்து வந்து தாராசுரத்தில் வைத்திருக்கும் துவார பாலகர் சிலையின்மேல், ‘சுவஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜய ராசேந்திரதேவர் கலியாணபுரம் எரித்துக் கொண்டுவந்த துவார பாலகர்’ என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், சளுக்கப் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இராசாதிராசனுக்கு அவனுடைய தம்பி இராசேந்திரன் பெருந் துணையாக இருந்தான்; சளுக்கப் போரில் சோழரின் படைகளுக்குத் தலைமை தாங்கினான். கொப்பம் என்ற இடத்தில் கொடும் போர் ஒன்று நிகழ்ந்தது (கி.பி. 1052). சளுக்க மன்னன் சோமேசுவரன் சோழரின் தாக்குதலுக்குச் சளைத்துத் தோற்றோடி விட்டான். சோழர்கள் மாபெரும் வெற்றி வீரர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனால், இராசாதிராசன் போர்க்களத்தில் புண்பட்டு வீர மரணம் எய்தினான். பிற்காலக் கல்வெட்டுகள் அவனை ‘ஆனைமேற் றுஞ்சிய மன்னன் என்று புகழ்கின்றன. இராசாதிராசன் தன் மரணத்தைத் தானே தேடித் தழுவிக் கொண்டான். தன் முன்னோர் தூக்கி நிறுத்திய வெற்றிக் கொடியைத் தாழாது உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் அவன் கொப்பத்துப் போரை மேற்கொண்டான். இப் போரில் மட்டுமன்றி வேறு பல போர்களிலும் அவன் தானே போர்க்களத்தில் நேரில் நின்று வீரச் செயல்கள் புரிந்து வந்துள்ளான். இராசாதிராசன் பிறவியிலேயே ஈடிணையற்றுப் போர்த் தொழிலில் வீரனாக விளங்கினான். தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே பல பகைவரை அடிபணிவித்துப் பகை களைந்து அசுவமேத யாகம் ஒன்று இயற்றுவித்தான். தன் பெரிய தந்தையார், தன் உடன்பிறந்தார், தன் மக்கள் அனைவருக்குமே தன் ஆட்சிப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தான். இராசாதிராசன் பூரட்டாதியில் பிறந்தவன். அவனும் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவியருள் ஒருத்தி ‘திரைலோக்கியம் உடையார்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தாள். கலியாணபுரத்தில் தான் மேற்கொண்ட வெற்றி நீராட்டு விருதான |