பக்கம் எண் :

22வடமொழி வரலாறு

நிலையம்-நிலய

     நில்-நிலை-நிலையம் = 1. நிற்குமிடம், தங்குமிடம், இருப்பிடம்.

"நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினான்"
(கம்பரா. கிளை. 55)
     2.கோயில்.
   
"நல்லூரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான்"
(தேவா. 414: 5 ), (திவா.)

     'அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு.

     நிலை=நிற்கும் சிற்றிடம் (stand). எ-டு: கதவுநிலை, தேர்நிலை.

     நிலையம்-நிற்கும் பேரிடம் (station). எ-டு: புகைவண்டி நிலையம்.

     வடவர் நி + லய என்று பகுத்து, ஒன்று இன்னொன்றோடு ஒன்றிவிடும்
இடம் என மூலப் பொருள் கூறுவர்.

      நி = கீழ். லீ = ஒட்டு. லீ-லய = ஒட்டுகை. நிலீ = கீழ்த் தங்கு,
படிந்திரு. நிலைத்திரு. நிலய = தங்கிடம், இருக்கை, குடியிருப்பு, குகை, கூடு.

     தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டி, அதை வடவர்
செயற்கை முறையிற் சிதைப்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டாம்.
தம் கொள்கையை நிறுவவே, நிலையம் என்னும் சொல் வருமிடமெல்லாம்
நிலயம் என்றே எழுதுவர், அல்லது பதிப்பிப்பர்.

நீரம்-நீர

     நீள் - நீர் = நீளும் பொருள். நீர் x நிலம். நில்-நிலம் = நிற்கும்
பொருள்.

     நீர் - நீரம் - ஈரம். நீர் - ஈர். ஈர்மை = தண்மை. எ-டு: ஈர்ங்கதிர்,
ஈர்ங் கை.

நீலம்-நீல

     நீர்-நீல் = நீலம்.

     நீர்நிலைகட்குள் கடலே பெரிதாகவும் ஏனையவற்றிற் கெல்லாம்
மூலமாகவு மிருப்பதால், நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே
குறிக்கும்.

"நீரொலித் தன்ன நிலவுவேற் றானை"
(மதுரைக். 369)

     கடல்நிறம் நீலமா யிருப்பதால், நீர் என்னும் சொல்லினின்று
நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன.