பக்கம் எண் :


442


(பரத்தையினிடத்தில் இருந்து மீண்டு வந்த தலைவன் தோழியின்பாற்சூள் கூறித் தெளிவிக்கப் புகுகையில், ‘‘எம் நலனைத் தந்து நின்சூளைக் கொண்டு செல்க’’ என்று அவள் கூறி வாயில் மறுத்தது.)
 238.   
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை 
    
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி 
    
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் 
    
தொண்டி யன்னவென் னலந்தந்து 
5
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. 

என்பது தலைமகன் பரத்தையின் மறுத்தந்து (பி-ம்.மறுதந்து) வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது.

    (மறுத்தந்து - மீண்டு வந்து (குறுந்.209,கருத்து), தெளித்தல் - சூள் கூறித் தேற்றுதல்.)

குன்றியன்.

    (பி-ம்.) 2. ‘வாம்பணைத்’.

    (ப-ரை.) மகிழ்ந-, பசு அவல் இடித்த - பச்சை அவலை இடித்த, கரு காழ் உலக்கை-கரிய வயிரம் பொருந்திய உலக்கையை, ஆய் கதிர் நெல்லின் - அழகிய கதிரை உடைய நெற் பயிரை உடைய வயலினது, வரம்பு அணை துயிற்றி - வரப்பாகிய அணையிலே படுக்க வைத்து, ஒள் தொடி மகளிர் - ஒள்ளிய வளையை உடைய பெண்கள,் வண்டல் அயரும் - விளையாட்டைச் செய்யும், தொண்டி அன்ன - தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற, என் நலம் தந்து - எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு, நின் சூள் கொண்டனை சென்மோ - நினது சூளைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக.

    (முடிபு) மகிழ்ந, என் நலம் தந்து நின் சூள் கொண்டனை சென்மோ.

    (கருத்து) நீ சூள் கூறுவதனால் யாம் மயங்கேம்.

    (வி-ரை.) தலைவன் பரத்தையினிடத்தில் இருந்து மீண்டு வந்துதலைவியின் உடம்பாட்டைப் பெறும் பொருட்டுத் தோழியை அணுகிஅவளைத் தூது விடக் கருதி அவள் பால் சூளுற்றுத் தான் பரத்தைமை உடையன் அல்லனெனக் கூறிய வழி, தோழி, ‘‘நின் சூளின் இயல்பை நன்கறிவேம்; அதனை நீயே கொண்டு செல்; யாம் வேண்டேம். எம்பால் நீ நுகர்ந்த நலத்தைத் தந்து செல்க’ என்று கூறி வாயில் மறுத்தாள்.

    பாசவல் - நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல். என் நலந்தந்து சென்மோ: 236-ஆம் செய்யுள் வி-ரை பார்க்க. தொண்டி: குறுந்.210.