பக்கம் எண் :


443


    நெல்: வயலுக்கு ஆகுபெயர். துயிற்றி: துயிலாததனை இங்ஙனம் கூறியது இலக்கணை. மகிழ்நன் - மருத நிலத் தலைவன்.

    ஒப்புமைப் பகுதி 1. பாசவல்: அகநா. 141:16-8; புறநா.63:13; சீவக.68,1562.

    3. வண்டலயர்தல்: அகநா.180:3, 330:2.

    மு. குறுந். 243:3, 1-3. பதிற்.29:1-2.

    4. தொண்டியன்ன நலம்: ‘‘வளங்கெழு தொண்டி யன்னவிவணலனே’’, ‘‘திண்டேர்ப் பொறையன் றொண்டி யன்னவெம்’’ (அகநா.10;13, 60:7.) நலத்தைத்தா வென்றல்: குறுந்.236:2-6, ஒப்பு.

    5. தலைவனது சூள்; குறுந்.384:4; தொல். கற்பு.6,9; ஐங்.56:4; பரி.8:65, 12:64; கலி.75:21, 81:33.

(238)
  
(தலைவன் சிறைப்புறமாக இருக்கையில் தலைவி தோழிக்குக் கூறுவாளாய், ‘‘என் தோள்கள் நெகிழ்ந்தன; நாணமும் அகன்றது’’ என்று கூறி வரைவு கடாயது.)
 239.   
தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே 
    
விடுநா ணுண்டோ தோழி விடர்முகைச் 
    
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் 
    
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி 
5
பாம்புமிழ் மணியிற் றோன்றும் 
    
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. 

என்பது சிறைப்புறம்.

ஆசிரியன் பெருங்கண்ணன்.

     (பி-ம்.) 1. ‘தொடி நெகிழ்ந்தன’; 2. ‘விடுநாளுண்டோ’.

     (ப-ரை.) தோழி-, விடர் முகை சிலம்புஉடன் கமழும் -பிளப்பையும் முழைகளையும் உடைய பக்கமலை முழுவதும் மணம் வீசும், அலங்கு குலை காந்தள் நறு தாது - அசைகின்ற கொத்துக்களில் உள்ள காந்தட் பூவின் நறிய தாதை, ஊதும் தும்பி - ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பாம்பு உமிழ்மணியின் தோன்றும் - பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலத் தோன்றுகின்ற, முந்தூழ் வேலிய - மூங்கிலை வேலியாக உடைய, மலை கிழவோற்கு - மலைகளை உடைய தலைவன் பொருட்டு, தொடி ஞெகிழ்ந்தன - என் வளைகள் நழுவின; தோள் சாயின - என் தோள்கள் மெலிந்தன; விடு நாண் உண்டோ - இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.