பக்கம் எண் :


453


    (வி-ரை.) தலைவன் இரவுக் குறியின் கண் தலைவியோடு அளவளாவுதற்கு வந்து கதவைத் தட்டித் தன் வரவைக் குறிப்பித்தான். அப்பொழுது அவன் வந்தது தெரிந்த தலைவி வருந்தினாள். அவளது வருத்தத்தின் காரணத்தை உணராத செவிலி அவள் அச்சத்தால் அங்ஙனம் வருந்தினாள் என்று கருதி இறுகத் தழுவிக் கொண்டாள். இச் செய்தியையே தோழி தலைவனுக்குக் கூறினாள்.

    பல்லோர் துஞ்சும் யாமம் ஆதலின் தலைவன் செய்த ஒலி தெளிவாகக் கேட்டது. தாம் கேட்டதை வற்புறுத்திக் கூறுவாளாகி எதிர் மறையாலும் உடம்பாட்டாலும் உணர்த்தினாள். நள் - நளி என்பதன் திரிபு; மலைபடு. 397.

    ஓரி - ஆண் தலைமயிர்; இங்கே ஆண் மயிலின் கொண்டைக் காயிற்று. தலைவனை எதிர்ப்படாது தடுத்தலின் அறனில்யாய் என்றாள்.

    மேற்கோளாட்சி மு. காப்பு வரையிறத்தல் (தொல். களவு. 24, இளம்.); இரவுக் குறிக் காப்பின் கடுமை தோழி கூறியது ( தொல். களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. நள்ளென் யாமம; குறுந். 6:1 ஒப்பு. பல்லோர் துஞ்சும் யாமம் (குறுந். 6:1-3, 302:6-7, 355:4); "துஞ்சூர் யாமத்தும்", "பலர்மடி பொழுதில்" (ஐங்.13:4, 104:2.)

    2. களிறு தலைவனுக்கு: குறுந். 161:7, ஒப்பு.

    தலைவன் கதவம் முயறல்: "களையாநின் குறிவந்தெங் கதவஞ் சேர்ந் தசைத்தகை", "பொருந்துநோன் கதவொற்றிப் புலம்பியா முலமர" (கலி. 68:8, 83:2); "வீழாக் கதவ மசையினன் புகுதந்து", "கடைநின், றருங்கடிக் காப்பி னகனக ரொருசிறை, எழுதி யன்ன திண்ணிலைக் கதவம், கழுதுவழங் கரைநாட் காவலர் மடியத், திறந்து" (அகநா. 102:13, 311:1-5.)

    5. மயில் வலைப்படுதல்: குறிஞ்சிப். 250; கலி. 128:16; சீவக. 424, ந.

    6. அறனில் யாய்: குறுந். 262:2; நற். 63:6, 145:7; 376:12.

    அன்னை தலைவியை முயங்கல்: குறுந். 353:6-7.

(244)
  
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, "தலைவனது கொடுமையைப் பிறர் அறியின் அது மிக இன்னாது; ஆதலின் யான் ஆற்றியிருப்பேன்"என்று தலைவி கூறியது.)
 245.   
கடலங் கான லாய மாய்ந்தவென் 
    
நலமிழந் ததனினு நனியின் னாதே 
    
வாள்போல் வாய கொழுமடற் றாழை 
    
மாலை வேனாட்டு வேலி யாகும் 
5
மெல்லம் புலம்பன் கொடுமை 
    
பல்லோ ரறியப் பரந்துவெளிப் படினே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.