Primary tabs
-
பாடம் - 1C01141 பாரதிதாசனின் தமிழ் உணர்வு
தமிழ் மொழியைப் பாரதிதாசன் உயிருக்கு நிகராகக் கருதினார். தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பைத் தமிழ்மக்களும் பிறரும் உணர வேண்டும் என்னும் நோக்கத்துடன் தமிழ்மொழியின் பழைமைச் சிறப்பைத் தமது பாடல்களில் படைத்துள்ளார்.
தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் கருவி, தமிழ் மொழியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்விச் சாலைகளிலும், ஏடுகளிலும், வழக்கு மன்றங்களிலும் தமிழ் முழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்ற நிலை உருவாக வேண்டும் என்று பாரதிதாசன் தெரிவித்த கருத்துகளை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பாரதிதாசன், தமிழ்மொழி, நாடு, மக்கள் ஆகியவற்றின் மேல் கொண்டிருந்த உணர்வுபூர்வமான மதிப்பை இப்பாடம் எடுத்துக் கூறுகிறது. இதனைப் படிப்போர்:
-
தமிழ்மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு - இவற்றின்பால் பாரதிதாசன் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுதலையும் உயர்ந்த மதிப்பையும் எடுத்துச் சொல்லவும், அவற்றிற்குச் சான்றாகப் பாரதிதாசனின் கவிதை வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டவும் இயலும்;
-
அத்துடன், பாரதிதாசன் கவிதைகளில் காணும் உணர்ச்சி வேகம், சொல்லாட்சி, வருணனைச் சிறப்பு ஆகியவற்றையும் உணர்ந்து விளக்க இயலும்.
-